அதிமுகவில் சசிகலா பொதுச்செயலாளர் ஆவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்ட முன்னாள் எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்ததைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியை ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா ஏற்க வேண்டும் என்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் உட்பட பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இது ஒரு புறம் இருந்தாலும், மற்றொரு பக்கம் சசிகலா பொதுச்செயலாளர் ஆவதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுகவின் திருச்சி முன்னாள் எம்எல்ஏவான கே.சவுந்திரராஜன் ஒரு கேள்வி எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
அதில் அவர், ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதால் உடனே தமிழக அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் எனவும் அம்மாவுக்குப் பிறகு சின்னம்மா என பதவிக்காக அமைச்சர்கள் கூவுகிறார்கள் என கூறியிருந்தார்.
இந்நிலையில் கே.சவுந்திரராஜனை சசிகலாவின் ஆதரவாளா்கள் வாயை மூடிக்கிட்டு சும்மா இருக்க மாட்டாயா என்றும் இனி இப்படி பேசினால் கொலை செய்து விடுவோம் என்று தொலைப்பேசியில் மிரட்டியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனால் அவர் நேற்று காவல்நிலையத்திற்கு சென்று புகார் தெரிவித்துள்ளார்.
சசிகலாவை எதிர்த்த அதிமுகவினருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டிருப்பது அந்த கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.