பணி சூழலினால் தனது மகனை பிரிந்திருக்க வேண்டியிருக்கிறதே என்ற ஏக்கமே பெண் மருத்துவர் சுதாமல்லிகாவை தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசையாய் பெற்றெடுத்த மகனை உடனிருந்து பார்த்து கவனித்து வளர்க்க முடியவில்லையே ஏன்ற ஏக்கத்தில் மகனுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் பெண் மருத்துவர் சுதா மல்லிகா.
சுதாமல்லிகா, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவராக வேலை செய்து வந்தார். மேலும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இதயவியல் துறையில் மேற்படிப்பு படித்து வந்தார்.
அதேபோல், கணவர் சதீஷ்குமாரும் நரம்பியல் துறையில் மேல் படிப்பு படித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு வயதில் மகன் உள்ளான். தனது ஆசை மகனை போட்டோ எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டு அழகு பார்த்தார் சுதா.
தம்பதியர் இருவரும் அன்றாடப் பணிக்குச் சென்று விடுவதோடு, மேற்படிப்பும் படித்து வருவதால் குழந்தையைப் பராமரிக்க ஆள் இல்லாமல் திணறினர். ஈரோட்டில் இருக்கும் சுதா மல்லிகாவின் பெற்றோர், குழந்தையைப் பார்த்துக்கொள்ள முன்வந்ததால் குழந்தையை தனது தாய் வீட்டில் விட்டார் சுதா.
மகனை வேறு இடத்தில் விட்டதால் மன உளைச்சலுக்கு ஆளானார். தினசரி மகனின் மழலை குரலை கேட்காமல் தூக்கம் வராது சுதாவிற்கு. நேற்று வழக்கமான நேரத்தில் தாயாருக்கு சுதா மல்லிகா போன் செய்யவில்லை. இதனால் குழப்படைந்தார் சுதாவின் அம்மா.
சதீஷ்குமார் பணியை முடித்து விட்டு நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். இருவரிடமும் வீட்டின் சாவி உள்ளதால் சதீஷ் குமார் தன்னிடம் இருந்த சாவியை கொண்டு வீட்டை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது படுக்கை அறையில் மனைவி சுதா மல்லிகா தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதனிடையே தனது தற்கொலைக்கான காரணமாக, ஒரு கடிதத்தையும் சுதா மல்லிகா எழுதியுள்ளார். அதில், 'தாய்ப்பாசத்தில் ஒவ்வொரு நாளும் துடிக்கிறேன் மகனே', என்று தொடங்கி மகனின் பிரிவால் படும் துயரத்தை மட்டுமே எழுதி வைத்துள்ளார்.
வீட்டில் ஆட்டோமேடிக் பூட்டு பொருத்தப்பட்டுள்ளதால் கொலை செய்யப்பட்டு, அவர் தூக்கில் தொங்க விடப்பட்டாரா என பொலிசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
பொருட்கள் எதுவும் திருடுபோகவில்லை என்றாலும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கமெரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, சுதா மல்லிகாவுக்கு திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ளதால் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.