தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவர்களை தன் கண்முன்னால் தூக்கிலிட வேண்டும் என்று பெண்ணின் தாயார் கூறியுள்ளார்.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.
அவரது முகத்தில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்துள்ளனர். கொலை செய்த அவர்கள் சடலத்தை ஒதுக்குப்புறமான இடத்தில் விட்டுச் சென்றதால், நாய்கள் அப்பெண்ணின் சடலத்தை குதறி சிதைத்தன.
இச்சம்பவம் அப்பகுதியில் மட்டுமின்றி, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுகுறித்து அப்பெண்ணின் தாயார் கூறுகையில், எனது மகளைக் கொன்றவர்கள் வெறும் 5 நிமிடங்களில் அந்தக் கொடூரத்தை செய்துவிட்டனர்.
அவர்களை என் கண்முன்னால் தூக்கிலிட்டு கொல்லுங்கள். இதற்காக நான் பல நாட்கள் காத்திருக்க முடியாது.
என் மகள் ஆசைப்பட்டாள் என்று இரண்டு தினங்களுக்கு முன் ஒரு சங்கிலி வாங்கிக் கொடுத்தேன்.
அவள் ஆசைப்பட்ட அந்த சங்கிலிதான் அவள் சடலத்தை அடையாளம் காட்ட உதவும் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
எனது மகளுக்கு நேர்ந்த கொடுமை நிர்பயாவுக்கு நேர்ந்த கொடுமையைக் காட்டிலும் மோசமானது என்று அழுதபடி கூறியுள்ளார்.